கீதா எங்களின் மகள்: சொந்தம் கொண்டாடும் தெலுங்கானா தம்பதியர்
ஹைதராபாத்: பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ள கீதா தங்களின் மகள் என்று தெலுங்கானா தம்பதியர் சொந்தம் கொண்டாடியுள்ளனர். மரபணு சோதனைக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத கீதா 8 வயது சிறுமியாக இருக்கும்போது வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்று விட்டார்.லாகூர் ரயில் நிலையத்தில் கீதாவை மீட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் போலீசில் ஒப்படைத்தனர். அங்குள்ள எதி அறக்கட்டளை நிர்வாகிகள் கீதாவை வளர்த்து வந்தனர். 14 ஆண்டுகாலமாக கீதா பாகிஸ்தானில் இருந்த கீதாவை நடிகர் சல்மான்கானின் திரைப்படம் வெளி உலகிற்கு அடையாளம் காட்டியது
நடிகர் சல்மான்கான் நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்' இந்தி படம் பாகிஸ்தானில் வெளியானது. இது சிறுமி கீதாவின் கதையைப் போன்று இருப்பதாக ஊடகங்களில் வெளியானது. இதன் பின்னரே கீதாவின் கதை வெளியுலகுக்கு தெரிய வந்தது.
கீதாவின் பெற்றோர்
சிறுமி மீது பரிதாபப்பட்ட பாகிஸ்தான் அரசாங்கம் கீதாவின் பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இறுதியில் அவளது பெற்றோர் பீகாரில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு கீதா நேற்று இந்தியா அழைத்து வரப்பட்டார். கீதாவுக்கு தற்போது 23 வயது ஆகிறது.
அடையாளம் தெரியலையே
டெல்லி விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்திருந்த அவரின் குடும்பத்தாரை அவரால் அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து அவர் அவர்களை சந்திக்காமலேயே சென்றுவிட்டார். குடும்பத்தாரை அடையாளம் காண முடியாததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கீதாவுக்கு மரபணு சோதனை நடத்தினர்.
மரபணு சோதனை
முன்னதாக அவரின் தந்தை என்று கூறும் ஜனார்தன் மஹதோ உள்ளிட்ட குடும்பத்தாருக்கு கடந்த 24ம் தேதி மரபணு சோதனை நடத்தப்பட்டது. மரபணு சோதனை முடிவுகள் வர 15 முதல் 20 நாட்கள் ஆகும். சோதனை முடிவுகள் வரும் வரை காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மரபணு சோதனையில் கீதா என் மகள் தான் என்பது உறுதியாகிவிடும் என ஜனார்தன் மஹதோ தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா தம்பதி
இதற்கிடையே இந்தியா திரும்பிய கீதா எங்களது மகள் என்று தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு தம்பதி சொந்தம் கொண்டாடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் சம்மம் மாவட்டம் படமடா நரசாபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா - கோபம்மா தம்பதிகள் நேற்று செய்தியாளர்களிடம் பேசினர்.
எங்களின் மகள் ராணி
பாகிஸ்தானில் இருந்து திரும்பிய கீதா என்ற பெண் எங்களது மகள் ராணி. கடந்த 8ம்தேதி பத்திரிகையில் அவள் புகைப்படத்தை பார்த்தபோதே அவர் எங்களது மகள் என்று தெரிந்து கொண்டோம். 15 வருடங்களுக்கு முன் 7 வயது இருக்கும்போது அவள் காணாமல் போய் விட்டாள். அப்போது அவளுக்கு சரியாக பேச்சு வராது. கீதாவின் கண், மூக்கு, முகச்சாயல் எனது மகள் ராணிபோல் உள்ளது என்று கூறியுள்ளனர்.
பரிசோதனைக்கு தயார்
நாங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால் டெல்லி சென்று எனது மகளை பார்க்க முடியாமல் இருக்கிறோம். முதல்வரோ அரசியல் தலைவர்களோ எங்களுக்கு உதவி செய்து எனது மகளை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.
கிராமத்தினர் உதவி
கீதா எங்கள் மகள் என்பதை நிரூபிக்க நாங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உள்பட தயாராக இருக்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறினார்கள். தங்களது மகளின் சிறிய வயது புகைப்படத்தை அவர்கள் செய்தியாளர்களிடம் காட்டினார்கள். கிருஷ்ணய்யா தம்பதிகளுக்கு உதவி செய்ய நரசாபுரம் பஞ்சாயத்து தலைவர் மோகன்ராஜ் உதவி செய்ய முன்வந்து உள்ளார்.