தெலுங்கானாவில் களமிறங்கிய ''ரெசார்ட் புகழ்'' டி.கே சிவக்குமார்.. குதிரை பேரத்தில் குதித்த காங்கிரஸ்
தெலுங்கனா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சி இப்போதே குதிரை பேரத்தில் குதித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கனா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சி இப்போதே குதிரை பேரத்தில் குதித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
தெலுங்கானாவில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ''பீப்பிள் பிரண்டிற்கும்'' , தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
ஆனால் அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது, பெரும்பாலும் அங்கு தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தயார்
இதற்கு காங்கிரஸ் நேற்றே தயாராகிவிட்டது. நேற்றே காங்கிரஸ் கட்சி அம்மாநில ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மனை சந்தித்து, தொங்கு சட்டசபை வந்தால், எங்களைதான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். எங்கள் கூட்டணியை தேர்தலுக்கு முந்தைய கூட்டணியாக கருத வேண்டும் என்று ஆளுநரிடம் காங்கிரஸ் தரப்பு கூறியது. இதனால் காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சியை பிடிப்பதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வருகிறது.
பேரம்
இதன் காரணமாக அங்கு காங்கிரஸ் கட்சி இப்போதே குதிரை பேரத்தில் குதித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சி தங்கள் பக்கம் இழுக்க பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நேரடியாக இதுகுறித்து குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
ஆடியோ வெளியானது
அதேபோல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை சேர்ந்த மாரி ஜனார்த்தன ரெட்டிக்கு நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி போன் செய்து காங்கிரஸ் தரப்பிற்கு மாறும்படி கூறியதாக போன் ஆடியோக்கள் வெளியாகி உள்ளது. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர காங்கிரஸ் தயார், நீங்கள் மாறி விடுங்கள் என்று காங்கிரஸ் கூறியதாக, அவர் போன் ரெக்கார்டிங் ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
களம்புகுந்த மூத்தவர்கள்
இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இப்போதே கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும், காங்கிரஸ் மலை போல நம்பி இருக்கும் நபருமான டிகே சிவக்குமார் தெலுங்கானா சென்றுள்ளார். அதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், அஹமது பட்டேல், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் தெலுங்கானாவில் களமிறங்கி உள்ளனர்.
ரெசார்ட் ரெடி
இதற்காக காங்கிரஸ் இப்போதே இரண்டு ரெசார்ட்களை கர்நாடகாவில் தேர்வு செய்தி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களுரில் உள்ள இரண்டு ரெசார்ட்களை காங்கிரஸ் கட்சி இப்போதே தேர்வு செய்து வைத்து இருப்பதாகவும், தொங்கு சட்டசபை உருவாகும் சமயத்தில், உறுப்பினர்களை அங்கு அழைத்து செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகிறது.