தெலுங்கானாவில் தப்பியோட முயற்சித்த 5 "தெஹ்ரீக் கலாபா இ" தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்ததாக 5 தீவிரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டதாக 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வாரங்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி இயக்கத்தின் ஆதரவு பெற்ற தெஹ்ரீக் கலாபா இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் முக்கியமானவன் விகரூதீன், குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியவன். ஹைதராபாத்தில் தொடர் தாக்குதல்களையும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை படுகொலை செய்யவும் இவன் திட்டம் தீட்டியிருந்தான்.
இத்தீவிரவாதிகள் 5 பேரும் இன்று வாரங்கல் சிறையில் இருந்து ஹைதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்டனர்.
அப்போது போலீசாரைத் தாக்கி ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு தப்பி ஓட அனைவரும் முயற்சித்துள்ளனர். இந்த மோதலில்தான் 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட விகரூதீன், சையத் அம்ஜத், ஹனீப், ஜாஹிர் மற்றும் இர்பான் அலி ஆகிய அனைவருமே தெஹ்ரீக் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 5 பேரையும் வாரங்கல் சிறையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றுவதற்காக போலீசார் அழைத்து வந்துள்ளனர்.