ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை.. தெலுங்கானா ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
ஹைதராபாத்: தெலுங்கானாவில் முன்னாள் அரசு அதிகாரியை சட்ட விரோதமாக சிறையில் அடைத்ததற்காக ஐஏஎஸ் அதிகாரிக்கு 30 நாள் சிறை தண்டனை விதித்து ஹைகோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
மெகபூப் நகரை சேர்ந்தவர் முன்னாள் அரசு அதிகாரி புசையா. இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் கட்டிய நிலையில், அப்பகுதி மக்கள், கூடுதல் கலெக்டராக இருந்த சிவக்குமார் என்பவரிடம் அதுபற்றி புகார் அளித்தனர். இதனையடுத்து கட்டுமானத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் சிவக்குமார்.
இதனை எதிர்த்து புசையா வழக்கு தொடர்ந்தார். இந்த தடையை ஹைகோர்ட் நீக்கி உத்தரவிட்டது. இருப்பினும் சிவக்குமார், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, புசையாவை 2 மாதங்கள் சிறையில் அடைத்தார்.
விடவில்லை புசையா. ஜாமீனில் வெளி வந்ததும், ஹைகோர்ட்டில் சிவகுமாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய, ஹைகோர்ட், சிவக்குமாருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ், 30 நாள் சிறை தண்டனை விதித்தும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது. புசையாவுக்கு வழக்கிற்கு நிவாரண நிதியாக 50,000 வழங்க வேண்டும் என்று தெலுங்கானா மாநில அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டது.