புதுசா இருக்கே.... சாப்பிட வாங்க... உணவை வீணடித்தால் 'அபராதம்' தாங்க
வாரங்கல்: நீங்கள் வீட்டில் சாப்பிடாமல் பாதியில் எழுந்து உணவை வீணாக்கிவிட்டு சென்றால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் தெலுங்கானாவில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடும் போது உணவை வீணாக்கி விட்டு பாதியில் எழுந்தால் உங்களுக்கு அபாரதம் விதிப்பார்கள்.
ஒரு வேளைக்கு கூட சரியான உணவு கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் நம் நாட்டில் பசியுடன் வாழ்கிறார்கள். ஆனால், அதே நேரம் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சாப்பிடும் உணவை வீணாக்கி வருவதாக புள்ள விபரங்கள் கூறுகின்றன. இதை தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள 'கேடாரி ஃபுட் கோர்ட்' என்ற உணவகம் நன்றாக புரிந்து கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் உணவை வீணாக்கக்கூடாது என்ற நோக்கத்தில் என்ன செய்யலாம் என்று ஓட்டல் உரிமையாளர், லிங்காலா கேடாரி, தீவிரமாக யோசித்தார். இதையடுத்து வாடிக்கையாளர்கள் உணவை வீணாக்கினால் ஒரு பிளேட்டுக்கு ரூ.50 அபாரதம் விதிக்கப்படும் என ஓட்டலில் விளம்பர பலகை வைத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அபராதம் விதிக்கும் திட்டத்தை தனது உணவகத்தில் இவர் செயல்படுத்தி வருகிறார்கள். இதுவரை 14,000 ரூபாய் வரை அபராதமாக கிடைத்துள்ளது. அந்த தொகையை அநாதை இல்லங்களுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக லிங்காலா கேடாரி கூறுகையில், "எனது நோக்கம் உணவை யாரும் வீணாக்கக்கூடாது. யார் உணவை வீணாக்குகிறார்களோ அவர்களுக்கு அபராதம் விதிக்கிறேன்.
இதனால் என்னுடைய உணவகத்துக்கு வருபவர்கள், உணவை வீணாக்கக்கூடாது என்று எச்சரிக்கையாக உள்ளனர். இருந்த போதிலும் சிலர் உணவை வீணாக்கும் சம்பவங்கள் நடக்கிறது. அவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகிறேன். எனினும் எங்கள் ஓட்டலில் சாப்பாடு நன்றாக இல்லை என்று சொல்லி வீணாக்குபவர்களிடம் அபராதம் வாங்க மாட்டேன். ஆனால் சாப்பாடு ருசியாக இல்லை என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்" என்றார்.