மோடியின் 'மேக் இன் இந்தியா'வை குறிவைக்கும் தெலுங்கானா
ஹைதராபாத்: பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய மாநிலமாக செயல்பட தெலுங்கானா முயற்சிக்கிறது.
ஏரோஸ்பேஸ் (விமான துறை) மற்றும் பாதுகாப்பு துறையில் தெலுங்கானா வளர்ச்சி பெற அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் திட்டம் வகுத்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள நோவோடெல் ஹோட்டலில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கும் சர்வதேச மாநாட்டில் பாதுகாப்பு துறையை பிடிக்கும் தனது கனவு பற்றி ராவ் தெரிவிக்க உள்ளார்.
விமான நிறுவனங்கள் தெலுங்கானாவில் செயல்பட வசீகரமான திட்டங்களை ராவ் வைத்துள்ளார். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை தெலுங்கானா முழுமனதுடன் ஏற்க தயாராக உள்ளது.
இது குறித்து ஏரோநாடிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா தலைவர் டாக்டர் வி.கே. சரஸ்வத் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
விமான போக்குவரத்து துறை மற்றும் பாதுகாப்பு துறையில் வாய்ப்புகள் தேடுவதுடன் மாநாட்டில் தெலுங்கானாவில் சப்ளை செயின் லாஜிஸ்டிக்ஸ் பற்றியும் தெரிவிக்கப்படும். ஹைதராபாத்தில் பல பாதுகாப்பு துறை நிறுவனங்கள் உள்ளன. அதன் மூலம் தெலுங்கானா முழுவதும் பயனடைய வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். தெலுங்கானாவில் வியாபாரம் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு நிலம், தொலைதொடர்பு சிஸ்டங்கள், உள்கட்டமைப்பு, வரி விலக்கு அளிக்க அரசு தயாராக உள்ளது.
விமானம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்க முதல்வர் விரும்புகிறார். இந்த மாநாட்டில் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உதவி செய்யப்படும். தஸ்ஸால்ட் ஏவியேஷன், ஹனிவெல், பெல் ஹெிகாப்டர்ஸ், இஸ்ரேலி ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏர்பஸ், லாக்ஹீட் மார்டின் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்த நிறுவனங்கள் தெலுங்கானாவில் வியாபாரம் செய்தால் மாநிலம் பொருளாதார ரீதியில் பயனடையும்.
ஹைதராபாத்தில் பல பாதுகாப்பு துறை டிஆர்டிஓ கூடங்கள், பொதுத் துறை பாதுகாப்பு நிறுவனங்கள் உள்ளதால் உலக விமான நிறுவனங்கள் கூட்டு முயற்சியை எதிர்பார்க்கலாம். நிலம் ஒரு பிரச்சனையாக இருக்காது. நிறுவனங்கள் செயல்படத் தேவையான அனைத்தையும் விரைந்து செய்து கொடுக்க மாநில அரசு தயாராக உள்ளது. விரைவில் தெலுங்கானா இந்தியாவின் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு துறையின் முக்கிய மாநிலமாகும் என்றார்.
தெலுங்கானா மாநில நிறுவன உள்கட்டமைப்பு கார்பரேஷன் தலைவர் ஜெயேஷ் ரஞ்சன் தொலைபேசி மூலம் ஒன்இந்தியாவிடம் தெரிவித்ததாவது,
ஏரோஸ்பேஸ் கொள்கை ஒன்றை தயார் செய்துள்ளது அரசு. அதை விரைவில் சட்டசபையில் அறிமுகப்படுத்தும். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு, ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட 12 முக்கிய துறைகளை அரசு குறிவைத்துள்ளது. இது எங்கள் நிறுவன கொள்கையின் ஒன்றாகும். சுமார் 500 சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 3 முதல் 4 தலைமுறைகளாக இங்கு செயல்படுகின்றன. பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. எங்களின் நிறுவன கொள்கை வெளியான பிறகு வியாபாரத்திற்கு சிறந்த மாநிலமாக தெலுங்கானா ஆகும். ஏரோஸ்பேஸ் துறையில் எங்கள் மாநிலத்தில் அடுத்த தலைமுறை ஆய்வுகள் எல்லாம் நடைபெற்று வருகிறது என்றார்.