புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய தெலுங்கானா போலீஸ்
மேடக்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, ஒருநாள் காவல் ஆணையராக அவன் நியமிக்கப்பட்டான்.
தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் இஷான். இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனுக்கு போலீஸ் அதிகாரியாக பணியாற்ற ஆசை. ஆனால் அவனது ஆசையை நிராசையாக்கும் வகையில், உயிர்க்கால்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். எனினும் அவனது ஆசையை பெற்றோர், காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என்ற அவனது எதிர்கால விருப்பத்தை நிறைவேற்ற போலீசார் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து ராச்சகோண்டா மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து இஷான் அழைத்து செல்லப்பட்டான். அங்கு போலீசார் அவனுக்கு சல்யூட் அடித்து வரவேற்றனர். அவனது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராச்சகோண்டா மாநகர போலீஸ் கமிஷ்னர், இஷானை ஒருநாள் போலீஸ் கமிஷ்னராக நியமித்தார்.
இதனையடுத்து, ஆணையருக்கான இருக்கையில் இஷான் அமரவைக்கப்பட்டான், இதை பார்த்து மகிழ்ச்சியில் கண் கலங்கிய சிறுவனின் பெற்றோர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.