தெலுங்கானா: ஓடும் வேனில் கர்ப்பிணியிடம் பாலியல் வன்கொடுமை... தப்பிக்க குதித்த பெண் பலி
பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க, ஓடும் வேனிலிருந்து குதித்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பாலியல் வன் கொடுமையில் இருந்து தப்பிக்க, கர்ப்பிணி ஒருவர் ஓடும் வேனிலிருந்து குதித்து உயிரிழந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் வசித்து வந்தவர் உதே கலாவதி,35. பழைய துணிகளை விற்கும் தொழில் செய்யும் இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத்திற்கு அருகே உள்ள கோம்பள்ளியில் துணிகளை விற்று விட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பஸ்சை தவறவிட்டதை அடுத்து தனது குழந்தையுடன் வேனில் உதவி கேட்டு ஏறினார்.
ஹைதராபாத் - நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுக் கொண்டிருக்கும் போது, வண்டியில் இருந்த டிரைவர் மற்றும் கிளினர் இருவரும் சேர்ந்து கலாவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். பாலியல் வன்கொடுமைபடுத்த முயற்சி செய்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, ஓடும் வேன் என்றும் பாராமல், கதவை திறந்து கொண்டு கீழே குதித்தார் கலாவதி. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவரும் கிளீனரும் குழந்தையை வண்டியிலிருந்து இறக்கி விட்டு தப்பிச்சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார் கலாவதி, குழந்தை அருகே அழுது கொண்டிருந்தது. கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வந்து பார்த்த போது கலாவதி இறந்து போயிருந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு, பையில் இருந்த செல்போன் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண்ணின் மரணத்திற்குக் காரணமான டிரைவரையும், கிளினரையும் தேடி வருகின்றனர்.