15வது நிதிக்குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு ரூ.40000 கோடி இழப்பு! தமிழக அரசு ஏன் எதிர்க்கவில்லை?
திருவனந்தபுரம்: 15வது நிதிக்குழு பரிந்துரை குறித்து விவாதிக்க திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற, தென் மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய அரசுக்கு நெருக்கடி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1976ம் ஆண்டு முதலாம் நிதிக்குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை நிதி கமிஷனை மாற்றி அமைத்து மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்து அளிக்கிறது. தற்போது 14வது நிதிக்குழு காலகட்டமாகும். 14வது நிதிக்குழுவின் காலம் வரும் 2020ம் ஆண்டுடன் முடிகிறது.
மாநிலங்களுக்கான நிதிப்பங்கீடு என்பது, 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. அடுத்து 15வது நிதிக்குழு தொடங்குகிறது. இந்த நிதிக்குழுவின் பரிந்துரையின் மாநிலங்களுக்கு நிதிப்பங்கீடு என்பது 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறுகிறது.
தமிழகம், தெலுங்கானா
இதை கண்டித்து தென் மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டுக்கு கேரள நிதி அமைச்சர் ஐசக் அழைப்புவிடுத்திருந்தார். கேரள மாநில தலைநகரம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தை, தமிழகம் மற்றும் தெலுங்கானா புறக்கணித்தன. ஆந்திர மாநிலத்தின் சார்பில் நிதி அமைச்சர் யணமல ராமகிருஷ்ணனுடு, கர்நாடக சார்பில் கிருஷ்ணா பைரே கவுடா, புதுச்சேரி சார்பில் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
கேரள முதல்வர்
கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சில் கூறுகையில், "15வது நிதிக்குழு பாகுபாட்டின் பரிந்துரைகள் பாகுபாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் பரிந்துரைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தி மாநிலங்களின் வரி வருவாயில் சுயாட்சி என்பது பறிக்கப்பட்டுவிட்ட நிலையில் 15வது நிதிக்குழுவின் அடிப்படையில், வளங்களையும், வருவாயையும் பகிர்வதில் நியாமற்ற தன்மைகடைபிடிப்பவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
ஆந்திர நிதி அமைச்சர்
ஆந்திர நிதி அமைச்சர் யனமலா ராமகிருஷ்ணுடு பேசியது: ஆந்திரா 15வது நிதிக்குழுவுக்கு எதிராக இல்லை. நிதிக்குழுவின் பரிந்துரைகளை வகுத்து அதற்கு அனுமதியளித்த மத்திய அரசின் செயல்பாடுகளைதான் கண்டிக்கிறோம். மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமல் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிிவித்தார்.
புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: இந்த மாநாடு மத்தியஅரசின் கண்ணைத் திறப்பதுபோல் இருக்க வேண்டும். 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள்தான் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. நிர்வாகத்தில் மோசமாக இருக்கும் மாநிலங்களுக்குதான் வெகுமதியும், அதிக நிதி ஒதுக்கீடும் தரப்படுகிறது. இது சரியில்லை. போதுமான நிதியை ஒதுக்காவிட்டால், வளர்ந்த மாநிலங்கள் எப்படி தங்கள் வளர்ச்சியை முன்னெடுத்து கொண்டு செல்ல முடியும். கூட்டாச்சி தத்துவத்தைப் பற்றி பேசும் பிரதமர் மோடியோ உண்மையில் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். மாநிலங்கள் உரிமைக்காக, மத்திய அரசுக்கு எதிராக போராடுவோம் என்றார்.
தமிழக நிலை
நிதியை அதிகம் பெற மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு பிற மாநிலங்கள் தோள் தட்டி நிற்கும் நிலையில், 15வது நிதிக்குழு பரிந்துரையால் அதிகம் நிதி இழப்பை சந்திக்க உள்ள தமிழகம் வாய் மூடி இருக்கிறது. தமிழக அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவது உறுதி என்கின்றன நிதி ஆய்வுகள்.