தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- மத்திய அமைச்சர் சிரஞ்சீவி ராஜினாமா!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைச்ச மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் சிரஞ்சீவி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான வரைவு ஆந்திரா மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இனிமேல், இம்மசோதா, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஆந்திர சட்டசபையின் ஒப்புதலுக்காக அதை அனுப்பி வைப்பார்.
இந்நிலையில், தெலுங்கானா பிரிவினை காரணமாக அதிருப்தி அடைந்த, சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகருமான சிரஞ்சீவி நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் 4 பேர் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். அப்போது, தெலுங்கானா மசோதாவுக்கு ஆந்திர சட்டசபையின் ஒப்புதலை பெறுவதற்கான நடவடிக்கைகள், சரி வர பின்பற்றப்படவில்லை. இதற்கு பின்னணியில் அரசியல் சதி உள்ளது. ஆகவே, தாங்கள் இவ்விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்க வேண்டும்' என்று அவர்கள் கூறினர்.