6 டெலிகாம் நிறுவனங்களால் அரசுக்கு ரூ 12400 கோடி இழப்பு: சிஏஜி அதிர்ச்சி அறிக்கை
டெல்லி: ரிலையன்ஸ் உட்பட நாட்டின் 6 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அரசுக்கு ரூ. 12,400 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
2ஜி முறைகேடு பூதாகரமாக வெளிவந்தபிறகு, சிஏஜி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கணக்குகள் மற்றும் அவற்றின் வருமானம் ஆகியவற்றை அவ்வப்போது சரிபார்த்து வருகிறது.
அதன்படி, சமீபத்தில் ஆய்வு அறிக்கை ஒன்றை சிஏஜி வெளியிட்டுள்ளது.
ஏமாற்று வேலை...
அதில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடா, ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஏர்செல் உள்ளிட்ட 6 முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருமானத்தைக் குறைத்துக் காட்டி மத்திய அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
தவறான வருவாய்க் கணக்கு...
மேற்கூறிய இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த 2006-07 மற்றும் 2009-10 ஆகிய ஆண்டுகளில் 46,000 கோடிக்கு மேல் வருமானம் பார்த்துள்ளன. ஆனால், தங்களின் வருமானத்தை குறைத்து அரசிடம் அவை கணக்குக் காட்டியுள்ளன.
ரூ. 12,400 கோடி இழப்பு...
இதனால் மத்திய அரசுக்கு ரூ.12,400 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கை கூறுகின்றனது.
வழக்குகள்...
கடந்த 2009ம் ஆண்டு சிஏஜி, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளை சரிபார்க்க துவங்கியது. அப்போது அதனை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிஏஜி.யின் ஆய்வுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் கணக்கு விபரங்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
வருவாய்க் கணக்குகள்...
இதன்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வரவு-செலவு கணக்கை அரசிடம் தாக்கல் செய்து வருகின்றன. அந்த தொகையும், அரசிடம் செலுத்தும் வருவாய் கணக்கு விபரமும் ஒன்றாக உள்ளதாக என சிஏஜி ஆய்வு நடத்தி வருகிறது.
கண்டுபிடிப்பு...
தற்போது அந்த ஆய்வில் தான் மேற்கூறிய 6 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருமானத்தைக் குறைத்துக் காட்டி அரசை ஏமாற்றியதை சிஏஜி கண்டுபிடித்துள்ளது.
அமைதி காக்கும் நிறுவனங்கள்...
சிஏஜியின் இந்த குற்றச்சாட்டு குறித்துச் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி நஷ்டம்?
உரிமத்துக்கான கட்டண வகையில் மட்டும் ரூ. 3750 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிஏஜி கூறியுல்லது. மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணமாக மட்டும் ரூ. 1460 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளனராம். மேலும், கட்டப்படாத தொகைக்கான வட்டித் தொகை ரூ. 7200 கோடியாகும்.