3ஜி, 4ஜி இணைப்புகளுக்கு காஷ்மீரில் தடை... புலம்பலில் டெலிகாம் நிறுவனங்கள்
இந்தியா முழுக்க 3ஜி, 4ஜி இணைப்புகளைக் கொடுத்து அதிரடி வியாபாரம் செய்து வரும் டெலிகாம் நிறுவனங்கள் காஷ்மீரில், 2ஜி சேவைக்கு மட்டும் அனுமதி என்பதால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் டெலிகாம் நிறுவனங்கள் 3 ஜி மற்றும் 4 ஜி சேவைகளை ரத்து செய்துவிட்டு, 2ஜி சேவையை மட்டும் வழங்க வேண்டும் என அம்மாநில போலீஸ் அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று ஸ்ரீநகரின் பந்தா சௌக் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்களின் முகாம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த துணை ஆய்வாளர் உயிரிழந்தார்.
மேலும், வீரர் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பின்னர் தப்பி சென்ற தீவிரவாதிகள் இரண்டு பேர் டெல்லி பப்ளிக் பள்ளியில் மறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பகுதியை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். எனவே, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டிற்கு எதிரான பல கருத்துக்கள் இணையதளம் வழியாக பரப்பப்படுவதை தடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் உடனடியாக 3 ஜி மற்றும் 4 ஜி சேவைகளை ரத்து செய்து 2ஜி சேவை மட்டும் வழங்கப்பட வேண்டும் என அம்மாநில போலீஸார் டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.