விமானங்களில் பயணிகள் இனி செல்போன் பேசலாம்... இன்டர்நெட் பார்க்கலாம்
டெல்லி: விமானங்களில் பயணிகள் இனி செல்போனில் பேசவும், இன்டர்நெட்டை பயன்படுத்தவும் தொலைத்தொடர்பு துறை அனுமதி அளித்துள்ளது.
விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது செல்போன் மற்றும் லேப்டாப்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுவது இல்லை. இந்நிலையில் அதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் கூறுகையில் விமானங்களில் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.
இந்த அனுமதியை தொடர்ந்து விதிமுறைகள் உருவாக்கப்படுகின்றன. விதிமுறைகளின் அடிப்படையில் டெலிகாம் , விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து சேவை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
முதற்கட்டமாக இந்திய வான்வெளியில் மட்டும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது என்று தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.