நில அதிர்வால் டெல்லியில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு
டெல்லி: ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து டெல்லியில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் டெல்லியில் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் காபூலில் இருந்து 256 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு 196 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.
இதையடுத்து டெல்லி, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியில் சில நிமிடங்கள் நீடித்த நில அதிர்வால் மக்கள் பீதியடைந்தனர்.
நிலம் அதிர்ந்தவுடன் அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். இந்நிலையில் டெல்லியில் மெட்ரோ சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு மெட்ரோ சேவை மீண்டும் துவங்கியது. நில அதிர்வு ஏற்பட்ட உடன் மக்கள் ஆளாளுக்கு சொந்தங்களுக்கு போன் செய்து பேசியதால் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது.
குர்காவ்னில் நில அதிர்வால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வால் உயிர் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.