ஹெல்மெட் அணிந்து வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள்.. விழிப்புணர்வுக்காக இல்லை பாதுகாப்பிற்காகவாம்!
தெலுங்கானாவில் பள்ளிக்கட்டிடம் பாதுகாப்பானதாக இல்லை என்று ஆசிரியர்கள் ஹெல்மெட் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத் : தெலுங்கானாவில் பள்ளிக்கட்டிடம் பாதுகாப்பானதாக இல்லை என்று ஆசிரியர்கள் நூதன முறையில் ஹெல்மெட் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள சின்ன சங்ரம்பேட்டை கிராமத்தில் ஆசிரியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் ஹெல்மெட்டுடனே ஒரு நாள் முழுவதும் இருந்துள்ளனர். மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் போது கூட ஹெல்மெட் அணிந்தே வகுப்பை எடுத்துள்ளனர்.
ஹெல்மெட் அணிந்தது விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல இவை. ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் கட்டிடத்தின் அவல நிலை குறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை என்பதால் இந்த போராட்டத்தை ஆசிரியர்கள் முன்எடுத்தனர.
6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மிகப்பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தை புதுப்பிக்க நிதி கேட்டும் உள்ளூர் எம்எல்ஏ தரவில்லை என்பதோடு மழைக்காலங்களில் பெரும்பாலும் பள்ளிகளுக்கு விடுமுறையே அளிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தப் பள்ளியில் உள்ள சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 664 மாணவர்கள் படித்து வருகின்றனர். சுமார் 3 ஆண்டுகளாக பாதிப்பிற்கு ஆளாகியுள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறும் மாவட்ட கல்வி அதிகாரிகள், இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.