ஜெகன் மோகன் ரெட்டியை வீடு தேடிச் சென்று சந்தித்த நடிகர் சிரஞ்சீவி...!
Recommended Video
அமராவதி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை மெகாஸ்டார் சிரஞ்சீவி சந்தித்து பேசியிருப்பது அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த 2008-ல் பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் கட்சியை தொடங்கிய சிரஞ்சீவியால், அதை சரியாக கொண்டு செல்ல முடியவில்லை. இதையடுத்து கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் ஐக்கியமானார் அவர். சிரஞ்சீவிக்கு மன்மோகன் சிங் அரசில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனிடையே சிரஞ்சீவியை ஆந்திராவில் காங்கிரஸின் முகமாக பயன்படுத்த நினைத்தது கட்சித் தலைமை.
ஆனால் அவரோ ஆளைவிட்டால் போதும் என்ற நிலையில், 2014-ம் ஆண்டு காங்கிரஸ் தோல்விக்கு பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து மெதுவாக ஒதுங்கத்தொடங்கிய அவர் கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. இந்நிலையில் அவரை பாஜகவில் சேருமாறு அக்கட்சியின் தலைமை அழைப்பு விடுப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் எப்படி சூப்பர்ஸ்டார் ரஜினியோ அதேபோல் ஆந்திராவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி. இவரை பயன்படுத்தி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜகவை பலப்படுத்த நினைக்கிறாராம் அமித்ஷா. ஆனால் மீண்டும் அரசியலுக்கு செல்ல சிரஞ்சீவிக்கு துளியும் விருப்பமில்லை. தொடர்ந்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்த நடிகர் சிரஞ்சீவி, சுமார் அரைமணி நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு புறப்பட்டார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனக் கூறப்பட்டாலும், முக்கியமான விவகாரம் குறித்தே இருவரும் பேசியிருக்கக்கூடும் எனத் தெரிகிறது. வீட்டிற்கு வந்த நடிகர் சிரஞ்சீவிக்கு வெள்ளியில் செய்யப்பட்ட அன்னப்பறவை உருவத்தை வழங்கினார் ஜெகன்.