படு வேகமாக கரையும் தெலுங்கு தேசம்.. கலக்கத்தில் சந்திரபாபு நாயுடு!
அமராவதி: தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து நாளுக்கு நாள் முக்கிய நிர்வாகிகள் விலகுவதால் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மனதளவில் கலங்கிப்போய் உள்ளார்.
ஆந்திராவின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த சந்திரபாபு நாயுடுவை ஆட்டம் காணச் செய்ததில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த 5 ஆண்டுகளாக ஆந்திராவில் ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி கடந்த சட்டமன்றத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸிடம் படுதோல்வியை சந்தித்தது.
இதையடுத்து முழு பலத்துடன் ஆட்சியமைத்த ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடுவை உண்டு இல்லை என செய்து வருகிறார். அவருக்கே இந்த நிலை என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு என நினைக்கும் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் பலர் சைலன்ட் மோடுக்கு சென்றனர். சந்திரபாபு நாயுடு அரசுக்கு எதிராக அறிவிக்கும் போராட்டங்களில் கூட பங்கெடுக்காமல் பதுங்கத் தொடங்கினர்.
மேலும், சிலர் பாஜகவுக்கு தாவி வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சியில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த 6 பேரில் ஏற்கனவே 4 பேர் பாஜகவிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆந்திரா மட்டுமல்லாமல் தெலுங்கானாவிலும் தெலுங்கு தேசம் கட்சி வேகமாக கரைந்து வருகிறது. தெலுங்கு தேசம் கட்சியில் தெலுங்கானா மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்த வீரேந்திர கவுத் நேற்று பாஜகவில் இணைந்துவிட்டார். மேலும், அவருடன் ஆயிரக்கணக்கான பேரையும் பாஜகவிற்கு அழைத்துச்சென்றுவிட்டார்.
கட்சியை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், தற்போது மக்கள் சந்திப்பு பயணங்களை தொடங்கியுள்ளார் சந்திரபாபு நாயுடு. மேலும், தனது மகன் நாரா லோகேஷையும் அடிக்கடி நிர்வாகிகளை சந்தித்துப் பேசி அவர்களுடன் தொடர்பில் இருக்குமாறு கூறியுள்ளார்.