மோடிக்கு எதிராக அடுத்த அஸ்திரம்.. உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருகிறது தெலுங்கு தேசம்
பிரதமர் மோடி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.
Recommended Video
டெல்லி: தெலுங்கு தேசம் கட்சி பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
அண்மையில் தெலுங்கு தெசம் கட்சி நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானம் மீதான விவாதத்தின்போது தெலுங்கு தேசம் எம்பிகள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது என்று குற்றம் சாட்டினர். இருப்பினும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் பேர விவகாரத்தில், ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஒப்பந்தத்தில் ரகசிய ஒப்பந்தம் எதுவும் இல்லை. ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமரும் தவறான தகவல்களை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். அதோடு, பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கட்டியணைத்து கை குலுக்கினார்.
ராகுல் காந்தியின் செயல் நாடாளுமன்ற விதிகளை மீறியதாக உள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியது. இதையடுத்து, ராகுல் காந்தி மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதேபோல, ரஃபேல் விவகாரத்தில் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் நோட்டீஸ் கொடுத்தது. இந்த உரிமை மீறல் தீர்மான நோட்டீஸை பரிசீலனை செய்வதாக லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சி எம்பிகள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியதில் நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்தியதற்காக, பிரதமர் மோடி மீதும், மத்திய அமைச்சர்கள் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்பிகளிடம் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சந்திரபாபு நாயுடு கூறுகையில், ஆந்திரப் பிரதேசம் மறுசீரமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்ட 90 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. இது நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதாகும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்றைய நிகழ்ச்சி நிரல்களில் தெலுங்கு தேசம் கட்சி பிரதமர் மோடி மீது உரிமை மீறல் திர்மானம் கொண்டுவருவது குறித்து இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.