ஆன்லைனில் ரம்மி விளையாடத் தடை.... தெலுங்கானா அரசு அதிரடி!
தெலுங்கானா அரசு, ஆன்லைனில் ரம்மி விளையாடக் கூடாது என தடை விதித்துள்ளது.
ஹைதராபாத்: ஆன்லைனில் ரம்மி விளையாடுவது மன உளைச்சலையும் பொருளாதார நஷ்டத்தையும் உருவாக்குகிறது என கூறி தெலுங்கானா அரசு, அந்த விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் மற்றும் கணினி பயன்பாடு அனைத்துத் தரப்பு மக்களிடமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களிடம் இவற்றின் பயன்பாடு மிக அதிக அளவில் உள்ளது.
இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சூதாட்டம் விளையாடலாம் என விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் ஆன்லைனிலும் வந்துகொண்டு இருக்கிறது. அதுவும், 'ஆன்லைனில் ரம்மி விளையாடி இத்தனை ஆயிரங்கள், லட்சங்கள் ஜெயித்தேன்' என யாராவது வாக்குமூலம் தந்துகொண்டிருப்பது போல் விளம்பரங்கள் குவிவதால் இளைஞர்களும் முதியவர்களும் அதில் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்கள் அதிக அளவு பணத்தை இழக்கிறார்கள். அதனால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என தகவல்கள் வெளியாகின. அதையடுத்து தெலுங்கானா அரசு, ஆன்லைனில் ரம்மி விளையாடத் தடை விதித்துள்ளது.