கேரளாவில் கொல்லப்பட்ட முஸ்லீம் வாலிபருக்காக சிவன் கோவிலில் பூஜை நிறுத்தம்
திருவனந்தபுரம்: கேரளாவில் பட்டப்பகலில் நடுத்தெருவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சபீருக்காக சிவன் கோவிலில் பூஜை நிறுத்தப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் அருகே உள்ள பத்தெனடா என்ற பகுதியில் உள்ள சிவன் கோவிலின் அறங்காவலர்கள் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தவர் சபீர்(23). அந்த கிராம மக்கள் மத வேறுபாடு இன்றி கோவில் விழாக்களில் கலந்து கொண்டு வருகின்றனர்.
வரும் 9ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் அந்த சிவன் கோவிலில் திருவிழா நடக்க இருந்தது. திருவிழாவின்போது பக்தர்கள் யானையின் வாலை பிடித்துக் கொண்டு ஓடும் நிகழ்ச்சி நடத்தப்படும். இது குறித்து சிவன் கோவில் நிர்வாகத்தினருக்கும் மற்றொரு கோவில் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பைக்கில் சென்ற சபீரை எதிர்தரப்பைச் சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து சபீரை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் போராட்டம் நடத்தினர். சபீரின் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
சபீர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில் திருவிழாவின்போது வழக்கமாக நடத்தப்படும் அன்னதான நிகழ்ச்சியை கிராம மக்கள் ரத்து செய்துள்ளனர். சபீருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் சிவன் கோவிலில் பூஜை நடத்தப்படவில்லை, கோவில் மணி கூட ஒலிக்கவில்லை.
வழக்கமாக அந்த கோவிலில் தினமும் 5 வேளை பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் திருவிழாவை நடத்த சபீர் ஏற்பாடு செய்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தந்தை குடும்பத்தை தவிக்க விட்டு தனியாக சென்ற பிறகு சபீரின் குடும்பத்தார் வறுமையில் வாடியுள்ளனர். அவருக்கு தாயும், 2 சகோதரிகளும் உள்ளனர். கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய சபீர் கட்டிட வேலை செய்து தனது சகோதரிகளை படிக்க வைத்துள்ளார்.