டெல்லியில் 37 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 37 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் கடந்த 37 நாட்களாக தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எலிக்கறி உண்பது, பாம்புக்கறி உண்பது, சேலை கட்டுவது, பிச்சையெடுப்பது, மண்சோறு சாப்பிடுவது, மண்டைஓட்டை ஏந்தியிருப்பது. பொட்டை அழிப்பது, பெண் வேடமிடுவது என நாள்தோறும் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், விவசாயிகளின் பிரதிநிதிகள் மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துப் இன்று பேசினர்.இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, எங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் தெளிவாக கூறியுள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளித்தார் என்றார். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அடிப்படையில் 2 நாட்களுக்கு போராட்டத்தை ஒத்திவைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.