சோமவார அமாவாசை வழிபாடு – கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி, 60 பேர் படுகாயம்!
சத்னா: மத்திய பிரதேசத்தில் சோமாவார அமாவாசை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்ரகூட் என்ற கிராமத்தில் புகழ்பெற்ற காம்த்நாத் என்ற சிவாலயம் உள்ளது.
இங்கு சோமவார அமாவாசை வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்படுவதுண்டு.
திரண்ட பக்தர்கள்:
இன்று அதிகாலை நடக்கும் பூஜையில் கலந்து கொள்வதற்காக மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த கோவிலில் திரண்டிருந்தனர்.
நீண்ட வரிசை:
நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் அதிகாலை பூஜைக்காக வரிசையில் நின்று விட்டனர்.
அமாவாசை பூஜைகள்:
இன்று அதிகாலை அந்த கோவிலில் சோமவார அமாவாசை பூஜைகள் தொடங்கியதும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றனர். அப்போது திடீரென பக்தர்களிடையே நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசல்:
நெரிசலில் பல பக்தர்கள் சிக்கி கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறி மிதித்து சென்றனர். இதற்கிடையே கடும் நெரிசல் காரணமாக சில பக்தர்கள் மயங்கி விழுந்தனர்.
மீட்புப் பணிகள்:
கடும் போராட்டத்துக்கு பிறகே நெரிசல் தீர்ந்தது. அதன் பிறகு அந்த பகுதியில் போலீசாரும், அதிகாரிகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
10 பேர் உயிரிழப்பு:
அப்போது நெரிசலில் சிக்கியவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
60 பேர் படுகாயம்:
இதற்கிடையே நெரிசலில் சிக்கியவர்களில் சுமார் 60 பேர் காயங்களுடன் தவித்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பரிகார பூஜைகள்:
பக்தர்கள் பலியானதைத் தொடர்ந்து கமதநாதர் ஆலயம் உடனடியாக மூடப்பட்டது. பிறகு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
விபத்து குறித்து விசாரணை:
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் விபத்து பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.