ஓய்வுக்குப் பின்... டெண்டுல்கர் கலந்து கொண்ட முதல் நாடாளுமன்ற கூட்டம்
டெல்லி: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் முதன்முறையாக இன்று ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொண்டார் சச்சின் டெண்டுல்கர்.
சமீபத்தில் நடைபெற்ற போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சமூக சேவையில் இறங்கினார்.
அதன்படி, ஐக்கிய நாடுகள் (ஐ.நா) அமைப்பின் ஒரு அங்கமான யுனிசெப் அமைப்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார் சச்சின். ‘சுத்தமான கழிவறை; அழுக்கற்ற தூய்மையான கைகள்' என்ற நோக்கத்தோடு செயல்படும் இந்த அமைப்பின் சார்பில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறார் சச்சின்.
இந்நிலையில், நடந்து கொண்டிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார் சச்சின்.
வணக்கம்....
தனது இருக்கைக்கு சென்று அமர்ந்த அவருக்கு, எதிர்ப்பட்டவர்கள் அனைவரும் தங்களது வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
வாழ்த்து....
கூட்டம் தொடங்கியதும், நாடாளுமன்றத் தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று, அத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, சச்சினுக்கு வழங்கப் பட உள்ள பாரத ரத்னா விருதுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது.
நன்றி....
உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி தந்த வாழ்த்துச் செய்திக்கு பதில் மரியாதை தரும் விதமாக எழுந்து நின்று கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்தார் சச்சின்.
ஆட்டோகிராப்...
அதன் பிறகு, சபை ஒத்தி வைக்கப் பட்டது. அந்தநேரத்தில் எழுந்து வந்த அவை உறுப்பினர்கள் வரிசையில் நின்று தங்களது வாழ்த்தை நேரடியாக கை குலுக்கி சச்சினுக்குத் தெரிவித்தனர். சிலர் ஆட்டோகிராப்பும் பெற்றுச் சென்றனர்.
புன்னகையோடு நன்றி...
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் புன்னகை தவழும் முகத்தோடு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார் சச்சின்.
ஓய்வுக்குப் பின்...
இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டார் சச்சின். ஆனபோதும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அவர் கலந்து கொள்ளும் முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.