ராஜ்யசபாவில் முதல் இன்னிங்ஸை தொடங்க முடியாமல் 'டக் அவுட்' ஆன சச்சின் டெண்டுல்கர்!
ராஜ்யசபாவில் கன்னிப்பேச்சை பேச முடியாமல் சச்சின் டெண்டுல்கர் நேற்று தவித்து போனார்.
டெல்லி: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் அமளியால் சச்சின் டெண்டுல்கர் தமது கன்னிப் பேச்சை பேச முடியாமல் அமைதியாக உட்கார நேரிட்டது.
ராஜ்யசபாவில் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டவர் டெண்டுல்கர். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜ்யசபாவில் நேற்றுதான் சச்சின் டெண்டுல்கருக்கு பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
பிற்பகலில் சச்சின் டெண்டுல்கர் பேச எழுந்து நின்றார். அப்போது, குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயற்சி, பாகிஸ்தானுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பு என பிரதமர் மோடி தெரிவித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் சச்சின் டெண்டுல்கர் பேச முடியாமல் போனது. அப்போது ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, இந்த தேசத்துக்கு மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவருக்கு நீங்கள் செய்யும் மரியாதை இதுதானா? எனவும் கேட்டுப் பார்த்தார்.
ஆனாலும் எதிர்க்கட்சிகளின் அமளி அடங்கவில்லை. இதனால் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. சச்சின் டெண்டுல்கர் கன்னிப் பேச்சை பேச முடியாமலே போனது.