10ம் தேதி ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடத்தும்: மும்பை ஏர்போர்ட் சுவரில் மிரட்டல்
மும்பை: மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறையின் சுவரில் வரும் 10ம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் நடத்தும் என்று யாரோ எழுதி வைத்துள்ளார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முணையத்தில் உள்ள கழிவறை சுவரில் வரும் 10ம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் நடத்தும் என்று பேனாவால் எழுதப்பட்டுள்ளது நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. விமான நிலையத்தில் உள்ள சிசிடிலி கேமராக்களை மத்திய பாதுகாப்பு படையினர் பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கழிவறைகளை சுத்தம் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் விமானத்தை தாக்கப் போவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் விமான நிலைய சுவரில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
சுவரில் எழுதப்பட்டது பற்றி மும்பை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ள 4 இந்திய வாலிபர்களும் மும்பை அருகே உள்ள தானேவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மும்பையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.