21 ஆண்டாக தேடப்பட்ட அல்உம்மா இயக்கத்தின் ஹைதர் அலி கைது
பாலக்காடு: 21 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த ஹைதர் அலியை கேரளாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை வின்சென்ட் ரோட்டைச் சேர்ந்தவர் ஹைதர்அலி(வயது 45). டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அல்உம்மா இயக்கத்திலும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.
கடந்த 1989-ம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகி வீரகணேஷ் கோவையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து விட்டு திரும்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஹைதர்அலி உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஹைதர்அலி தலைமறைவானார்.
இந்த நிலையில் கடந்த 1993-ம் ஆண்டு சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஹைதர்அலி உள்பட பலரை தேடிவந்தனர். கோவை உள்ளிட்ட சில இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்து அமைப்பை சேர்ந்த சில தலைவர்களை படுகொலை செய்ய ஹைதர்அலி சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. அதன்பேரில் ஹைதர்அலி, பாட்ஷா உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் ஹைதர்அலி பதுங்கியிருப்பதாகவும் அங்குள்ள ஒரு ஜவுளிக்கடையில் அவர் வேலை பார்ப்பதாகவும் கோவை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு விரைந்து சென்று ஜவுளிக்கடையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஹைதர்அலியை கைது செய்தனர்.
கோவை பெரியகடை வீதி போலீசார் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹைதர் அலி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஹைதர்அலியை வருகிற 17-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது கைதாகியுள்ள ஹைதர்அலி சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் 8 ஆண்டுகள் வசித்து வந்ததாகவும் அதன் பின்னர் கேரளா திரும்பி ஜவுளிக்கடையில் வேலை பார்த்ததும் தெரியவந்துள்ளது.