பஞ்சாப் விமானப் படை தளம் மீது தாக்குதல்- 5 தீவிரவாதிகள் சுட்டு கொலை- 3 விமானப் படை வீரர்கள் பலி!!
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் ராணுவ சீருடையுடன் நுழைந்து பயங்கரவாதிகள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இம்மோதலில் 3 விமானப் படை வீரர்களும் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப் படை தளத்துக்குள் ராணுவ சீருடையுடன் தீவிரவாதிகள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உள்ளே நுழைந்தனர். அவர்கள் திடீரென ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மூலம் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த பதிலடி நடவடிக்கைக்கு ஆளில்லா வேவு விமானங்கள், விமானப் படை ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன. இன்று அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணிவரை இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
சுமார் 5 மணிநேரம் நீடித்த இம்மோதலில் ஊடுருவிய 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் விமானப் படை அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் விமானப் படை தளத்துக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விமானப் படை தளத்தை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய பெரிய முதலாவது தாக்குதலாக இது கருதப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தானில் இருந்து பதன்கோட் மாவட்டத்துக்குள் ஊருவிய இந்த தீவிரவாதிகள் இகாகார் சிங் என்பவரை சுட்டுக் கொலை செய்திருந்தனர். பின்னர் குருதாஸ்பூர் போலீஸ் எஸ்.பி. சல்வீந்தர்சிங்கின் அலுவலக வாகனத்தை துப்பாக்கி முனையில் கடத்தி அதன் மூலமாக விமானப் படை தளத்துக்குள் ஊடுருவியிருந்தது தெரியவந்தது.
இந்த வாகனம், பஞ்சாப்- ஹிமாச்சல பிரதேச எல்லையில் அதாவது விமானப் படை தளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 30-ந் தேதியே பஞ்சாப் மாநிலத்துக்குள் ஊடுருவியதாகவும் கூறப்படுகிறது
அண்மையில்தான் பாகிஸ்தானுக்கு திடீரென நல்லெண்ண பயணமாக பிரதமர் மோடி சென்றிருந்தார். ஆனால் பிரதமர் மோடியின் பயணத்தை விரும்பாத அந்நாட்டு உளவு அமைப்பு, ராணுவத்தினர், இருதரப்பு உறவை சீர்குலைக்கும் வகையில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியது ஜெய்ஷியே முகமது என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து ராணுவ நிலைகளும் மிகவும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் இந்த தாக்குதல் தொடர்பாக அவசர ஆலோசனை நடைபெற்றது. இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்று உளவுத்துறை முன்னெச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மோடியிடம் தோவல் விளக்கம்
இதனிடையே பதன்கோட் தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கம் அளித்துள்ளார்.
பாக். கண்டனம்
இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.