தீவிரவாதத்திற்கு மதங்கள் கிடையாது: ஆமிர்கான்
மும்பை: மதத்தின் பெயரால் தீவிரவாதத்தைப் பரப்புபவர்களுக்கும், மதத்துக்கும் தொடர்பில்லை என்று பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தினருடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய ஆமிர்கான். மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது; மதத்தின் பெயரை கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை பரப்புபவர்கள், குறிப்பிட்ட மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் அல்ல.
முஸ்லிம், ஹிந்து, கிறிஸ்தவம், சீக்கியம் என்று எந்த மதமாக இருந்தாலும் சரி, தீவிரவாதத்தைப் பரப்புபவர்களுக்கும், அந்த மதங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே கருதுகிறேன். மதத்துக்காகவே பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக தீவிரவாதிகள் கூறிக் கொண்டாலும், உண்மையில் அவர்களுக்கும் மதங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மதம் நமக்கு அன்பை மட்டுமே போதிக்கிறது. இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. நான் சொல்ல விரும்பிய கருத்தை சொல்லி விட்டேன் என்றார் ஆமிர்கான்.
முன்னதாக இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதால், வேறு நாட்டுக்குப் போய்விடலாம் என தன் மனைவி சொன்னதாக நடிகர் ஆமிர்கான் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.