புல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.! இந்தியாவை எச்சரித்த பாக்.,
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கர சதி திட்டம் தீட்டி வருவதாக பாகிஸ்தான் உளவு நிறுவனம், இந்தியாவை உஷார் படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். புல்வாமா அருகே கோரிபோரா என்ற இடத்தில் சிஆர்பிஎப் வீரர்களின் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக தீவிரவாதி ஒருவன் சுமார் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை, ஓட்டி வந்து அதனை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் ஒன்றின் மீது மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான்.
இந்த பயங்கர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாக உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக அடுத்த சில நாட்களிலேயே, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமான படையினர் நுழைந்து, சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினர். இதில் ஏராளமான தீவிரவாத முகாம்களும், தீவிரவாதிகளும் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.
EXCLUSIVE: இளையராஜா - எஸ்.பி.பி.. இவங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை.. மனம் திறக்கிறார் மனோ
இந்நிலையில் புல்வாமாவின் அந்திபோரா பகுதியில் மீண்டும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்த, தீவிரவாதிகள் சதி செய்வதாக உளவு தகவல் ஒன்று கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் உளவு நிறுவனம் கூறியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக இந்த உளவு தகவலை தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பாகிஸ்தான் பகிர்ந்து கொண்டது. அன்சார் காஸ்வத் என்ற தீவிரவாத அமைப்பின் தளபதி ஜாகிர் மூசா, சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு படையினரால், காஷ்மீரின் ட்ரால் என்ற பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டான்.
அவனது மரணத்திற்கு பதிலடி கொடுக்க புல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த, தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய தூதகரகத்திற்கு பாகிஸ்தான் தகவல் கொடுத்துள்ளது. இத்தகவலை பகிர்ந்து கொண்டதுடன், விழிப்புடன் இருக்குமாறு இந்தியாவை எச்சரித்துள்ளது. இதே போல அமெரிக்காவிற்கும், பாகிஸ்தான் உளவு நிறுவனம் இது குறித்து தகவல் அளித்துள்ளது.
எதிர்காலத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்தால் பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்ட கூடாது, தீவிரவாதிகள் தனிப்பட்ட முறையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தியதற்காக தங்களுக்கு பதிலடி தர கூடாது. மேலும் சர்வதேச அளவில் நிர்பந்தங்கள் வர கூடாது என்பதற்காகவே, தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதனையடுத்து காஷ்மீரில் குறிப்பாக புல்வாமா பகுதியில், பாதுகாப்பு படையினர் உச்சகட்ட கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். புல்வாமா பகுதி முழுவதும் ராணு வீரர்கள் மற்றும் போலீஸார் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கடை வீதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்கள் உள்ளிட்ட இடங்கள் கூடுதல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.