இந்திய ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டதன் பின்னணியில் பாக். ராணுவம் இருந்தது அம்பலம்!
இந்திய ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருந்தது தற்போது நிரூபணமாகியுள்ளது. தீவிரவாதிகள் விட்டுச்சென்ற கருவியை ஆய்வு செய்த பாதுகாப்புப் படையினர் இதனை உறுத
ஸ்ரீநகர் : இந்திய ராணுவ வீரர் பிரபு சிங் என்பவர் அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் தீவிரவாதிகள் விட்டுச்சென்ற இரவு நேரத்தில் துல்லியமாக பார்க்கும் கருவி பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்துவது என தெரியவந்துள்ளது.
ஜம்மூ-காஷ்மீரின் மச்சில் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் 3 வீரர்களை சுட்டுக்கொன்றனர்.மேலும் பிரபு சிங் என்பவரின் தலையையும் அவர்கள் துண்டித்தனர். தீவிரவாதிகளின் இந்த கொடூர செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு இது பாகிஸ்தான் அரசின் ஆதரவுடனே நடந்திருப்பதாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் விட்டுச்சென்ற பொருட்களை கைப்பற்றிய ராணுவம் அதனை ஆய்வுக்கு அனுப்பியது. அதில் நைட் விஷன் எனும் இருட்டிலும் வழியை துல்லியமாக காணும் ஒற்றைக் கண் கண்ணாடி இருப்பது தெரியவந்தது. இது அமெரிக்க அரசால் தயாரிக்கப்பட்டது என்பதும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அதனை அமெரிக்கா வழங்கியதும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தும் கருவிகள், தீவிரவாதிகளிடம் வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளனர். நைட் விஷன் கருவி மட்டுமின்றி பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் மருத்துவப் பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பாகிஸ்தான் படையினர் பயன்படுத்தும் பைகளையும் தீவிவாதிகள் தாக்குதலுக்கு பயன்படுத்தியதையும் உறுதிபடுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் பொருட்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவது இது முதல்முறையல்ல என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஏற்கனவே பல முறை தீவிரவாதிகளிடம் இருந்து அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்தப் பொருட்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு உறுதி செய்வது மீண்டும் அம்பலமாகியுள்ளதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.