தை அமாவாசை: காசி முதல் ராமேஸ்வரம் வரை புனித நீராடி முன்னோர்களை வழிபட்ட மக்கள்
தை அமாவாசையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் இன்று புனித நீர் நிலைகளில் நீராடி தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்தனர்.
வாரணாசி: தை அமாவாசை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உத்தராயாண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு நன்றி கூறும் விதமாக புனித நீர் நிலைகளில் நீராடி அவர்களுக்கு தர்பணம் அளித்து ஏழைகளுக்கு தானம் அளிப்பது வழக்கம்.
தமிழகத்தில் தை அமாவாசை என்றும், வட மாநிலங்களில் மவுனி அமாவாசை என்றும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. வாரணாசியில் கங்கை தொடங்கி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல் வரை இந்துக்கள் புனித நீராடி முன்னோர்களை நினைவு கூர்ந்தனர்.
|
வட இந்தியாவில் தர்பணம்
வட மாநிலங்களில் கிருஷ்ணா, கோதாவரி ஆற்றங்கரைகள், அலாகாபாத், வாரணாசி போன்ற கங்கை நதிக்கரையிடங்கள் உள்ளிட்டவற்றிலும் லட்சக்கணக்கான மக்கள் கூடி, புனித நீராடி தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, வழிபட்டனர்.
திருவள்ளூர் வீர ராகவ பெருமாள்
தை அமாவாசை என்பதால் நேற்று இரவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம், சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து திருவள்ளூரில் குவிந்தனர். அதிகாலைகோவில் குளக்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் காட்சி அளித்த வீரராகவரை வழிபட்டனர்.
பாவம் நீங்கும்
திருவள்ளூர் வீரராகவர் கோவில் அருகில் ஹிருதாப நாசினி குளம் உள்ளது. இக்குளத்தில் நீராடினால் நோய், பாவம் நீங்கும் என்பதும், அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும் என்பதும் ஐதீகம். இதனால் ஆந்திராவில் இருந்து வந்து இங்கு தர்பணம் செய்து வழிபடுகின்றனர்.
காவிரியில் தண்ணீர் இல்லை
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடுமையான வறட்சியாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததாலும் தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். கட்டண குளியலறைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அங்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மாநகராட்சி சார்பிலும் பக்தர்கள் குளிக்க எந்தவித வசதியும் செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
கன்னியாகுமரியில் வழிபாடு
தை அமாவாசையை முன்னிட்டு நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவின் தென்பகுதியில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரையில் எங்கும் மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. அதிகாலையிலேயே புனித நீராடி விட்டு கடற்கரைக்கு வந்து வேத விற்பன்னர்கள் மூலம் பலிகர்மம் பூஜை செய்தனர்.வாழை இலையில் பச்சரிசி, பூ, தர்ப்பை புல், எள் போன்றவற்றை வைத்து அவற்றை தலையில் சுமந்து சென்று கடலில் போட்டு மீண்டும் புனித நீராடினார்கள்.
பகவதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
தை அமாவாசையை யொட்டி குமரி பகவதி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக் கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராமேஸ்வரம்
ராமநாதபுரம் மாவட் டம் சேதுக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் புனித நீராடி ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்டனர். ரமேஸ்லரம் அக்னி தீர்க்கடலில் புனித நீராடியவர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்தனர். இதனால் ராமேஸ்வரம் கோவில், கடற்கரை மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.