‘தலாஸீமியா’ குழந்தை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுத்த ஸ்பைஸ்ஜெட்...
அகமதாபாத்: எலும்பு மஜ்ஜை சிகிச்சைப் பெறுவதற்காக சென்னை புறப்பட்ட தலாஸீமியா நோய்ப் பாதிப்புள்ள 12 வயது குழந்தையை, விமானப் பயணத்திற்கு ஏற்ற உடல் நிலை இல்லை என காரணம் காட்டி ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அதிகாரிகள் ஏற்ற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் உள்ள கடிகி கிராமத்தைச் சேர்ந்தவர் கலு ஆண்ட்ரோலியா. இவரது 12 வயது மகன் ஜிக்னேஷிற்கு தலாஸீமியா நோய்ப் பாதிப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிக்னேஷிற்கு வேலூர் அருகே உள்ள மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர்.
எனவே, கடந்த வெள்ளியன்று மீண்டும் மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை சிகிச்சை பெற சென்னை செல்வதற்காக தனது மகனுடன் அகமதாபாத் விமான நிலையம் வந்துள்ளார் கலு.
ஆனால், ஜிக்னேஷிற்கு மட்டும் போர்டிங் பாஸ் தர விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர். காரணம் ஜிக்னேஷின் உடல்நிலை விமானத்தில் பயணம் செய்வதற்கு ஏற்ற நிலையில் உள்ளது என தகுந்த மருத்துவ சான்றிதழ்களை கலு கொண்டு வரவில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
மருத்துவரின் சான்றிதழ் வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் அலைக்கழித்ததால், தனது மகனின் சிகிச்சைப் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் தங்களது பயணம் ரத்தாகிப் போன நிலையில் விமான டிக்கெட் கட்டணமான ரூ. 30 ஆயிரத்தைத் திருப்பித் தர மறுப்பதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மீது கலு குற்றம் சாட்டியுள்ளார்.