மக்களவை துணை சபாநாயகராக அதிமுகவின் தம்பிதுரை ஒருமனதாக தேர்வு: நாளை அறிவிப்பு
டெல்லி: மக்களவை துணை சபாநாயகராக அதிமுகவின் தம்பிதுரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு மத்தியில் பதவி ஏற்ற பிறகு, புதிய சபாநாயகராக பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுமித்ரா மகாஜன் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதனிடையே மக்களவைக்கான துணை சபாநாயகர் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கி மதியம் முடிவடைந்தது.
துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட அதிமுகவின் தம்புதுரை மட்டுமே மனு தாக்கல் செய்தார். வேறு எந்த கட்சி சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. தம்பிதுரையின் வேட்புமனுவை பாஜகவின் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முன்மொழிந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரான மல்லிகார்ஜுன கார்கே வழிமொழிந்தார். தம்பிதுரைக்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மேலும் 11 கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்களவை சபாநாயகராக ஆளும்கட்சியை சேர்ந்தவர் இருப்பார் என்பதால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும். ஆனால் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறாத நிலையில், அக்கட்சியால் துணை சபாநாயகர் பதவிக்கு உரிமை கோர முடியவில்லை.
இந்நிலையில் தேர்தல் நடத்திதான் துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை உருவானது. இருப்பினும், தேர்தலை விரும்பாத நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கயநாயுடு, காங்கிரஸ் தரப்பில் பேசி அதிமுக உறுப்பினரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க உதவுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
தம்பிதுரை மக்களவை துணைத் தலைவராவது இது 2வது முறையாகும். ஏற்கனவே 1985 முதல் 1989 வரை துணை சபாநாயகராக தம்பிதுரை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பிதுரை தற்போது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
67 வயதான தம்பிதுரை நாடாளுமன்ற அ.தி.மு.க கட்சி தலைவராகவும் உள்ளார். 1984ல் முதல்முறையாக தருமபுரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் இவர். 1989, 1998,2009,2014 என மொத்தம் 5 முறை மக்களவைக்கு எம்.பியாக தேர்வானவர் தம்பிதுரை.