சசிகலா ஒப்புதலுடனே பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு - தம்பித்துரை
பாஜக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கு சசிகலா ஒப்புதலுடனே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்தார் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் கூறியுள்ளன. சசிகலா ஒப்புதலுடனேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி உறுதி என்று தெரிந்தும் வேட்பாளரை அறிவித்த பின்னர் அதிமுக, திமுக என எந்த கட்சியும் விடாமல் ஆதரவு கோரியது பாஜக தலைமை. கடந்த வாரம் வெங்கையா நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் தம்பித்துரை.
அப்போதே ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச்சு எழுந்தது. தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறியிருந்தார் தம்பித்துரை. இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்பு சசிகலாவை பெங்களூரு சிறைக்கு சென்று சந்தித்து பேசினார்.
குமுறிய சசிகலா
அப்போதே சசிகலா தனது உள்ளக்குமுறல்களை கொட்டி தீர்த்தாராம். ஜனாதிபதி தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு தருவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறினாராம். 134 எம்எல்ஏக்கள், 50 எம்பிக்களை கொண்ட கட்சியிடம் ஆதரவு கேட்பது இதுதான் முறையா என்று கேட்டாராம் சசிகலா.
ஆதரவு அறிக்கை
சசிகலாவிடம் பேசியதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறியதை அடுத்தே அவர் உடனடியாக பாஜகவிற்கு ஆதரவு என்று கூறினார். இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
தம்பித்துரை சந்திப்பு
ராம்நாத் கோவிந்தை இன்று தம்பித்துரை எம்.பி சந்தித்து பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைமை கழகம் சார்பில்தான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்றார்.
ஓற்றுமையாக இருக்கிறோம்
சசிகலாவை உள்ளடக்கியதுதான் அதிமுக தலைமை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிளவு இல்லை என்றும் கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளதாகவும் தம்பித்துரை கூறினார். அதே ஒற்றுமையோடு நிர்வாகிகளோடு சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ், ஈபிஎஸ் என அனைவருமே ஆதரவு கூறியுள்ளனர். சசிகலா சிறையில் இருப்பதால் கையெழுத்து இல்லாமல் தலைமை கழகம் அறிக்கை வெளியாகியுள்ளது என்றார். எது எப்படியோ சசிகலாவிடம் பேசியதை ஊடகங்களிடம் கொட்டி விட்டார் தம்பித்துரை. ஆனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களோ ஆதரவு யாருக்கு என்று சசிகலா அறிவிப்பார் என்று கூறி வருகின்றனர்.