தானே அருகே 50 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 11 பேர் பலி
தானே: தானே அருகே 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மும்பையை அடுத்த தானேயில் கிருஷ்ணா நிவாஸ் என்ற இடத்தில் 3 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்தக் கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது.
ஏற்கனவே, இந்தக் கட்டிடத்தை இடிக்கப் போவதாகக் கூறி அதில் குடியிருந்தவர்களை வெளியேறச் சொல்லி தானே மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. இதனால், அக்கட்டிடத்தில் குடியிருந்தவர்களில் பாதி பேர் வெளியேறி விட்டனர். சில குடும்பங்கள் மட்டுமே அங்கு வசித்து வந்தன.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர்.
இந்த கட்டிட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி படு காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவர்களில் நான்கு பேரது நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.