இந்தியா-அமெரிக்காவை உலுக்கிய பல கோடி ரூபாய் கால்சென்டர் மோசடி.. நடந்தது இப்படித்தான்!
மும்பை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள கால் சென்டர் மோசடி எப்படி நடந்தது என்கிற விவரம் அம்பலமாகியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த, 'கால் சென்டர்' மூலம், அமெரிக்க நாட்டை சேர்ந்த பலர், பண மோசடிக்கு ஆளானதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தானே மாவட்டம் மிரா ரோடு பகுதியில், மூன்று கால் சென்டர்களில், தானே போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தி மோசடியை கண்டுபிடித்தனர்.
மிரா ரோடு பகுதியில் உள்ள மூன்று கால் சென்டர்களில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட, 600க்கும் அதிகமானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, அமெரிக்கர்கள் பேசுவது போன்ற ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின், அமெரிக்க நாட்டினரை, போனில் தொடர்பு கொண்ட இவர்கள், தங்களை அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறியுள்ளனர்.
பின், "நீங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளீர்கள். உங்களை கைது செய்ய காவல் துறை தயார் நிலையில் உள்ளது. கைது நடவடிக்கையிலிருந்து தப்ப, குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும்" எனக், கூறியுள்ளனர். இதனால் பயந்த பலர், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர். ஓராண்டுக்கும் மேலாக இந்த மோசடி நடந்து வந்துள்ளது.
ஒரே நேரத்தில் 10 பேரை தொலைபேசியில் அழைக்கும் வகையிலான தொழில்நுட்ப சாப்ட்வேர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. போன் அழைப்பை பெறுவோருக்கு, அது அமெரிக்க உள்நாட்டு போன் நம்பர் போலத்தான் தெரியும். எனவேதான் அவர்களும், கால் சென்டர் ஊழியர்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் என நம்பி ஏமாந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் வழியாக எதிர்முனையில் பேசுபவர்களின் பெயர், பதவி, தொழில் குறித்த தகவலை தெரிந்து கொண்டு, அதிகமாக யாரிடம் பணம் இருக்கும் என கருதுகிறார்களோ அவர்களை மட்டும் தேர்வு செய்து ஏமாற்றியுள்ளது கால் சென்டர் கும்பல். சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்கள் அதிகம் ஷேர் ஆவதால் நேர்ந்த எதிர்மறை விளைவு இது என கூறப்படுகிறது.
இதுவரை சுமார் ரூ.30 கோடி மோசடி நடந்துள்ளதாக போலீசார், தானே கோர்ட்டில் இன்று தெரிவித்துள்ளனர். அமெரிக்க உளவுத்துறை, மும்பை போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் ரெய்டு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.