7 குழந்தைகள் உட்பட குடும்பத்தார் 14 பேரை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை... தானே அருகே பயங்கரம்!
தானே: மகாராஷ்டிராவில் தனது குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை கொடூரமாகக் கொலை செய்து விட்டு, 35 வயது மதிக்கத்தக்க நபர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே கசர்வாடி என்ற பகுதியில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
குடும்ப விழா ஒன்றிற்காக ஹசன் அன்வர் (35) என்பவரது வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை ஹசன், 7 குழந்தைகள், 6 சகோதரிகள் உட்பட தனது குடும்ப உறுப்பினர்கள் 14 பேரையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஹசனின் கையில் பெரிய கத்தி இருந்துள்ளது. இதனால், தனது குடும்ப உறுப்பினர்களை அவர், கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சொத்து தகராறு காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஒரு பெண் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுயநினைவு திரும்பிய பின்னரே இந்த கொலைகளுக்கான காரணம் வெளிச்சத்திற்கு வரும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
கொலை செய்ததாக கருதப்படும் ஹசன் நல்ல மனநிலையில் இருந்ததாகவே அவரது அக்கம்பக்கத்தார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் கசர்வாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.