14 பேரைக் கொன்ற தானே இளைஞர்... மன நலமற்ற சகோதரியை பலாத்காரம் செய்தது அம்பலம்!
தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை வெறித்தனமாக கொன்ற சம்பவத்திற்கு மூல காரணம், அந்த இளைஞர் செய்த ஒரு பாலியல் பலாத்காரம்தான் என்று தெரிய வந்துள்ளது.
பிப்ரவரி 28ம்தேதி தானே நகரில் ஹஸ்னைன் வரேகர் என்ற 35 வயது நபர் தனது மனைவி, பெற்றோர், 3 சகோதரிகள் என மொத்தம் 14 பேரை வெறித்தனமாக கொன்று குவித்தார்.பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை வெறித் தாக்குதலிலிருந்து அவரது தங்கை சுபியா பர்மார் (22) மட்டுமே உயிர் தப்பினார்.
அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நபர் ஏன் இப்படிச் செய்தார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது உயிர் தப்பிய சுபியா மூலம் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கான மூல காரணத்தை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, வரேகரின் ஒரு தங்கை பதுல். இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர். இவரை கடந்த ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் வரேகர்.
இந்த கொடுஞ்செயல் குறித்து தனது பிற சகோதரிகளிடமும், தாயாரிடமும் கூறியுள்ளார் பதுல். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தான் செய்த செயல், குடும்பத்தினருக்குத் தெரிய வந்ததை அறிந்த வரேகர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்தே அவர் அத்தனை பேரையும் கொன்று குவிக்க திட்டமிட்டார்.
கொலை வெறியாட்டம் போட்டபோது, வரேகரின் தாயார் ஒரு அறைக்குள் போய் பூட்டுப் போட்டுக் கொண்டு,என்னை விட்டு விடு, நான் உன் தாய் என்று கூறிக் கதறியுள்ளார். ஆனால் அதைக் கண்டு கொள்ளாத வரேகர், நீ இப்போது வெளியே வராவிட்டால் உனது கடைசிக் குழந்தையைக் கொன்று விடுவேன் என்று கூறியுள்ளார். இதை நம்பி அத்தாய் வெளியே வந்தார். பின்னர் தாய் என்றும் பாராமல் அவரை கொடூரமாகக் கொன்றார் வரேகர்.
இதற்கிடையே, பல்வேறு உறவினர்களிடம் வரேகர், ரூ. 67 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளாராம். இதனால் கடனைக் கொடுத்தவர்கள் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளனராம்.
இந்த நிலையில், வரேகருக்கு ஸ்பிளிட் பெர்சனாலிட்டி பிரச்சினை இருந்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.