சபரிமலை: டிசம்பர் 27ல் மண்டலபூஜை: ஆரன்முளாவிலிருந்து தங்க அங்கி பவனி
சபரிமலை: சபரிமலை கோவில் மண்டலபூஜையை ஒட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி பத்தணம் திட்டா மாவட்டம் ஆரன் முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்காரரதத்தில் இன்று புறப்பட்டது.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு பூஜைதான் மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 420 சவரன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும்.
பத்தணம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
நடை திறப்பு
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16ஆம்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 27ஆம்தேதி நடைபெறுகிறது.
பக்தர்கள் கூட்டம்
மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் ஐயப்பப் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 10 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்துதான் பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.
தங்க அங்கி பவனி
மண்டல பூஜையை யொட்டி சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் பத்தணம்திட்டா மாவட்டம் ஆரன் முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கார ரதத்தில் இன்று காலை புறப்பட்டது. முன்னதாக பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
பக்தர்கள் தரிசனம்
இன்று காலை ஆறு மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது. 23ஆம் தேதி ஓமல்லூர் பகவதி கோயிலிலும், 24ஆம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், 25ஆம் தேதி பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கும் இந்த பவனி 26ஆம் தேதி மதியம் பம்பை வந்தடையும்.
சன்னிதானத்திற்கு அங்கி
பம்பை கணபதி கோயில் அருகில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும், இந்த அங்கி மாலை மூன்று மணிக்கு தலைச்சுமடாக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும்.அந்த தங்க அங்கிக்கு தேவசம் போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்படும்.
ஐயப்பனுக்கு அணிவிப்பு
26ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 27ஆம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 27ஆம் தேதி இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
மகரவிளக்கு பூஜை
மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் 30ஆம்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படும். 2015ஆம் ஆண்டு 20ஆம் தேதிவரை பூஜைகள் நடைபெறும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.