சபரிமலை அய்யப்பனுக்கு தங்க அங்கி : டிச.22ல் ஊர்வலம்
திருவனந்தபுரம்: மண்டலபூஜை தினத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி பந்தளம் அரண்மனையில் இருந்து வருகிற 22-ந்தேதி சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நவம்பர் 15-ந்தேதி தொடங்கியது.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் காட்டுப் பகுதி வழியாகவும் பக்தர்கள் சன்னிதானத்தை நோக்கி செல்ல தொடங்கி விட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் ஆரவாரம்
முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை வரும் 26ம்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து விசேஷ வழிபாடுகள் நடைபெறும். இந்த தங்க அங்கி பந்தளம் அரண்மனையில் இருந்து வருகிற 22ம் தேதி சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
முதலில் ஆரமுலா பார்த்தசாரதி கோவிலில் வைத்து தங்க அங்கிக்கு பூஜைகள் நடைபெறுகிறது. பிறகு போனி மகாதேவர் கோவில், பெருநாடு தர்மசாஸ்தா கோவில் வழியாக 25ம்தேதி தங்க அங்கி பம்பை சென்று அடைகிறது.
பக்தர்கள் வரவேற்பு
வழிநெடுகிலும் தங்க அங்கிக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்து வழிபடுவார்கள். 25ம்தேதி பம்பை கணபதி கோவிலில் தங்க அங்கிக்கு பூஜைகள் நடத்தப்படும். அதன் பிறகு மாலை 6 மணிக்கு சன்னிதானத்திற்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்படும்.
சன்னிதானத்தில் பூஜை
வழியில் சரங்குத்தியில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானம் சென்று அடையும் அங்கு சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ்வரரு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் தங்க அங்கியை பெற்றுக் கொள்கிறார்கள். அன்று சுவாமி அய்யப்பன் சன்னிதானதில் தங்க அங்கியை வைத்து தீப ஆராதனை காட்டப்படும்.
ஜொலிக்கும் ஐயப்பன்
டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜையன்று பகலில் சுவாமி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும்.
தங்க அங்கியில் ஜொலிக்கும் அய்யப்பனை தரிசிக்க அன்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும்.
அன்று இரவு கோவில் நடைசாத்தப்படும். அதன் பிறகு மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மீண்டும் சபரிமலை கோவில் திறக்கப்படும்.