சுனந்தா மரணம்… போலீஸ் விசாரணை வளையத்துக்குள் சசிதரூர்
டெல்லி: காதல் மனைவி சுனந்தா கொலை செய்யப்பட்டார் என்று மருத்துவக்குழு அறிக்கை அளித்த பின்னரும் குருவாயூரில் உழிச்சல், பிழிச்சல் என ஹாயாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு டெல்லி திரும்பியுள்ள சசிதரூரிடம் போலீசார் தனது கிடுக்கிபிடி விசாரணையை தொடங்க உள்ளனர்.
மனதில் உதறல் இருந்தாலும் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று கூறியுள்ளார் சசிதரூர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி எம்பியான சசிதரூர், கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில் வெளியுறவு துறை இணை அமைச்சராக இருந்தவர். அப்போது சுனந்தா புஷ்கருடன் இணைத்துப் பேசப்பட்ட சசி தரூர், 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சசி தரூருக்கும், பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும் இடையே தகாக உறவு இருப்பதாக ட்விட்டரில் பதவிட்டிருந்தார் சுனந்தா. தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் சுனந்தா.
மத்திய அமைச்சரின் மனைவி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தற்கொலையா, கொலையா என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சுனந்தாவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு ஒரு ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதி அறிக்கையை டெல்லி போலீசாரிடம் கடந்த வாரம் அளித்துள்ளது.
அந்த இறுதி மருத்துவ அறிக்கையில் சுனந்தாவின் உடலில் விஷம் செலுத்தப்பட்டு அவருக்கு மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அதனை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் சசிதரூர் வீட்டில் வேலை பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால் சசிதரூரோ, கடந்த 2 வாரங்களாக கேரளாவின் குருவாயூர் நகரில் உள்ள ஒரு ஆயுர்வேத மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்னர் குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த அவர் கடவுளே காப்பாற்று என்கிற ரீதியில் குருவாயூரப்பனிடம் பிராத்தனை செய்தார்.
எது எப்படி என்றாலும் வழக்கு விசாரணைக்கு வந்துதானே ஆகவேண்டும் ஒருவழியாக கொச்சியில் இருந்து நேற்று விமானம் மூலம் டெல்லி திரும்பினார் சசி தரூர்.
அங்குள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை செய்தியாளர்கள் மொய்த்துக்கொண்டனர். அப்போது, அவரிடம் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பீர்களா? என்றும் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த சசிதரூர், ‘போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டியது எனது கடமை.
போலீஸ் விசாரணையை எந்த விதத்திலும் நான் குறைத்து மதிப்பிடவில்லை‘ என்று மட்டும் கூறிவிட்டு, நேராக லோதி எஸ்டேட்டில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டராம். எனவே போலீஸ் விசாரணை வளையத்திற்குள் சசிதரூர் விரைவில் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.