சசி தரூருக்கு பாக். பத்திரிக்கையாளருடன் தொடர்பு... கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி
திருவனந்தபுரம்: மத்திய அமைச்சர் சசி தரூருக்கு பாகிஸ்தான் செய்தியாளருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி நேற்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தனது கணவரும் மத்திய அமைச்சருமான சசி தரூருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கும் ரகசிய தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுத் தெரிவித்த அவரது மனைவி சுனந்தா, அதற்கடுத்த சில தினங்களிலேயே டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சுனந்தா மரணம் கொலை அல்லது தற்கொலையா என்பது குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், நேற்று கேரள சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ. ஜெம்ஸ் மேத்யூவ், மத்திய அமைச்சருக்கு பாகிஸ்தான் செய்தியாளருடன் தொடர்பு இருப்பது மாநில அரசுக்கு தெரியும் அல்லவா?' என வினா எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, ‘இது அனைத்தும் மீடியாக்களின் தகவல்கள் தான் என்றும் அரசு இதனை உறுதிபடுத்தவில்லை' என்றும் கூறினார்.
ஏற்கனவே சுனந்தா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தி வரும் நிலையில், இவ்விவகாரம் நேற்று சட்ட சபையிலும் எதிரொலித்தது. அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.