விமான தளங்கள் மீது அத்துமீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்த விமான படைக்கு உத்தரவு !
டெல்லி: பதன்கோட் விமான படை தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள விமான தளங்கள் மீது அனுமதியின்றி பறக்கும் விமானங்களை கண்டதும் சுட்டு வீழ்த்துவதற்கு விமானப் படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படைத் தளத்துக்குள் ஜனவரி 2 ஆம் தேதி புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 8 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. எல்லை பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், குடியரசுதினத்தன்று ராஜஸ்தான் மாநிலத்தில் மர்மாக பறந்த பலூன் ஒன்றும் விமான படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பின்னரும் மேலும் சில பலூன்கள் பறந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் குறிப்பாக விமானப்படை தளங்களின் மேல் அத்துமீறி பறக்கும் விமானங்கள் மற்றும் ஊடுருவ முயற்சிப்பவர்களையும் கண்டதும் சுடுவதற்கு இந்திய விமானப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.