பாஜக - திரிணாமுல் கட்சி மோதலால் பதற்றம்... மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்திற்கு தடை
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக பேரணியில் ஏற்பட்ட வன்முறை எதிரொலியாக ஒரு நாள் முன்னதாகவே பிரச்சாரத்தை முடித்து கொள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 9 மக்களவைத் தொகுதிக்கு, 7 வது கட்டமாக வருகிற ஞாயிற்று கிழமை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அதே நேரம், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
சிலைகள் உடைப்பு
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு என கண்ட இடமெல்லாம், மோதல்கள் வெடிக்கின்றன. அந்த வகையில், நேற்று, கொல்கத்தாவில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு, சிலைகள் உடைப்பு என தொடர்ந்ததால், கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
பதற்றம்
இந்தநிலையில், மே 17 ம் தேதிக்கு பதிலாக நாளை இரவு 10 மணியுடன் பிரச்சாரத்தை முடித்து கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜக - திரிணாமுல் ஆகிய கட்சிகளால் பதற்றம் நிலவி வந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி விடுவிப்பு
உள்துறை செயலாளர் பொறுப்பை தலைமைச் செயலாளரிடம் ஒப்படைத்தது தேர்தல் ஆணையம், உளவுப்பிரிவு ஏடிஜிபி பொறுப்பில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையம் விடுவித்தது.
ஊரடங்கு உத்தரவு
மேலும், இஸ்லாமிர்களின் கடைகள், வீடுகள் தாக்குப்படுவதை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கவலை தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.