பதவியேற்கும் முன்பே ஆட்டத்தை துவக்கிய ஜெகன்.. சந்திரபாபு மீதான புகார்களை விசாரிக்க போவதாக அறிவிப்பு
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் நாளை பதவியேற்க உள்ளார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகன் அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தல்களில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி நாளை விஜயவாடாவில் ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.
எந்த அமைச்சருக்கு என்ன பதவி தரலாம்? இங்க எல்லாம் உங்க சாய்ஸ்தான்.. கலக்கலாம் வாங்க!
ஆந்திராவிற்கு அவசியப்பட்ட தலைநகரம்
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது, ஆந்திராவின் தலைநகராக இருந்த ஹைதராபாத் தெலுங்கானாவோடு சென்று விட்டது. இதனால் ஆந்திர மாநிலத்திற்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்காக அமராவதியை ஆந்திராவின் புதிய தலைநகராக்க சந்திரபாபு முயற்சித்தார். அதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.
ஊழலுக்கு உள்ளிருந்தே உதவிய சந்திரபாபு
இந்த நிலையில் தான் ஆந்திராவில் ஆட்சி மாறியுள்ளது. ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி புதிய முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை உருவாக்க எடுத்த முயற்சியில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். புதிய தலைநகர் அமராவதியில் மிகப் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் ஊழல் நடைபெற்றுள்ளது. முதல்வர் பதவியில் இருந்த சந்திரபாபு நாயுடு இதற்கு உள்ளிருந்தே உதவியுள்ளார் என்று ஜெகன் குற்றம்சாட்டியுள்ளார்.
பினாமிகள் மீது இரக்கம் காட்டிய பாபு
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன், அமராவதி பகுதியில் சந்திரபாபு நாயுடுவும் அவரது பினாமிகளும் அடிமாட்டு விலைக்கு பெருமளவு நிலத்தை வாங்கிப் போட்டுள்ளனர். இதற்காக புதிய தலைநகர் வேறு இடத்தில்தான் வருகிறது என்று மக்களை திசைதிருப்பி விட்டு விட்டு, அதன்பின்னர் நிலங்களை வாங்கி குவித்துள்ளனர். அதே போல அவரது பினாமிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. மாறாக அதே பகுதியிலிருந்த விவசாயிகளின் நிலங்கள், மற்றவர்களின் நிலங்களை நாயுடு அரசு கையகப்படுத்தியுள்ளது. கையகப்படுத்திய நிலங்களை எந்த விலைக்கு வாங்க நாயுடு விரும்பினாரோ அந்த விலையை மட்டுமே கொடுத்துள்ளார்.
மாநிலத்தின் பாதுகாவலன் நான்
அமராவதியை தலை நகராக உருவாக்குவதில் நடைபெற்ற மிகப்பெரிய ரியல் எஸ்டேட் ஊழலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். தெலுங்கு தேசம் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் என்னென்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஜெகன் தெரிவித்துள்ளார். தனக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் முன்விரோதமும் இல்லை. மாநிலத்தின் பாதுகாவலன் என்ற முறையில் இதை தாம் செய்யப்போவதாக கூறியுள்ளார்.
ஆட்டத்தை துவக்கிய ஜெகன்
மேலும் பேசிய ஜெகன் இதற்கு முன்பு தொடங்கிய திட்டங்களில் ஊழல் நடைபெற்றது தெரியவந்தால், அந்தத் திட்டங்கள் ரத்து செய்யப்படும். எந்தத் திட்டங்களில் ஊழல் நடந்துள்ளன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவோம். மேலும் பொதுமக்களின் பணத்தை எப்படி சேமிக்கலாம் என்பதையும் நாங்கள் தெரியப்படுத்துவோம். ஆட்சிக்கு வந்ததும் ஊழல்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். நாளை ஆந்திர மாநில புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார். ஆனால் பதவியேற்கும் முன்னரே தனது ஆட்டத்தை ஜெகன் ஆரம்பித்து விட்டார். இனி ஆந்திர அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.