பீகார் மேட்டர் ஓவர்.. மேற்கு வங்கத்துக்கு அமித் ஷா போட்ட பிளான்.. கலக்கத்தில் மம்தா!
கொல்கத்தா: பீகாரில் பல்வறு கருத்துக்கணிப்புகளில் பாஜக-ஜேடியு கூட்டணி கண்டிப்பாக தோற்கும் என்று கூறப்பட்டது. இதை தவிடுபொடியாக்கி வெற்றி பெற்றுள்ளது பாஜக. அடுத்ததாக மேற்கு வங்க மாநிலத்தை குறிவைத்துள்ளது. இதனால் மம்தா பானர்ஜி கலக்கத்தில் உள்ளார்.
50 வருடங்களுக்கு மேலாக இடதுசாரி கொள்கையில் ஊறிப்போனது மாநிலம் மேற்கு வங்கம்., என்னதான் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், இடதுசாரி கொள்கைதான் அங்குள்ள அரசியல் கட்சிகளால் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. அங்கு முதல்முறையாக வலது சாரி கொள்கை உள்ள பாஜக வெல்வதற்கு ஆயத்தமாகி வருகிறது.
இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தல், மத்திய பிரதேசத்தில் ஆட்சியைதீர்மானிக்கும் இடைத்தேர்தல், குஜராத் சட்டசபை இடைத்தேர்தல், கர்நாடகா, தெலுங்கானாவில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் என பெரும்பாலானவற்றை பாஜக தான் வென்று சாதித்துள்ளது.
ஒற்றுமையின்மை
குறிப்பாக பீகாரில் எல்லா தொலைக்காட்சிகளுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோற்கும் என்றே கணிப்புகள் வெளியிட்டன. ஆனால் நடந்தது வேறு. ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி கடும் போட்டியை அளித்தாலும் வெல்ல முடியவில்லை. இதற்கு காரணம், எதிர்க்கட்சிகளிடையே நிலவிய ஒற்றுமை இன்மை. இன்னொரு முக்கிய காரணம் ஆர்ஜேடி கட்சி காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களை விட்டுக்கொடுத்து. இதேபோல் ஓவைசி உருவாக்கிய தனி கூட்டணி, இவை தான் பாஜக வெல்ல காரணமாக இருந்தது.
கூட்டணிகள் இல்லை
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்திலும் கிட்டத்தட்ட இதே நிலை தான் நீடிக்கிறது. இடதுசாரிகள் வழக்கம் போல் தனியாக நிற்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரிஸ் கட்சியும் சேர்ந்து நிற்குமா என்பது கேள்விக்குறி தான். எனவே பீகார் பணியில் பாஜக வெற்றி பெறுவது எளிது என்றே அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பாஜக அதிரடி வெற்றி
ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தல் பாஜக இதுவரை இல்லாத ஒன்றாக, 18 இடங்களில் வென்று அசத்தியது. மொத்தம் உள்ள 42 எம்பி தொகுதிகளில் 22 தொகுதிகளை மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. காங்கிரஸ் இரண்டு இடங்களில் வென்றது. இடதுசாரிகள் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
பாஜகவின் வாக்கு சதவீதம்
இதேபோல் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பாஜக 40.64 சதவீத வாக்குகளை வென்று இருந்தது. அதாவது 22.76 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று, 18 இடங்களை வென்றது. திரிணாமுல் காங்கிரஸ் 43.69 சதவீத வாக்குகளை பெற்ற போதிலும். 12 இடங்களை பறிகொடுத்து 22 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. எனவே வாக்கு சதவீத அடிப்படையில் கூட பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
அமித்ஷாவின் வியூகம்
தற்போது பீகாரில் பெற்ற வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் பாஜக, மேற்கு வங்கத்தில் முதல்முறையாக ஆட்சியை கைப்பற்ற கடும் சவால்களை அளிக்கும். அமித்ஷாவின் வியூகத்தை முறியடிப்பது மம்தாவுக்கு சாதாரணமாக இருக்காது. இதனால் தான் என்னவே முன்பே பிரசாந்த் கிஷோரை கூப்பிட்டு செயல் திட்டம் தீட்டி வருகிறார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் இனி பாஜகவின் அதிரடி அரசியலை எப்படி சமாளித்து எப்படி மீண்டும் மம்தா அரியணையில் ஏறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.