ஜார்கண்ட் வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. பாஜகவுக்கு கிடைத்த முதல் பெரிய அடி
Recommended Video
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக பாஜக தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை இழந்து உள்ளது.
பீகார் மாநிலத்திலிருந்து, ஜார்க்கண்ட் என்ற புதிய மாநிலம் 2000மாவது ஆண்டில் உதயமானது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 87 தொகுதிகளில் பாஜக 32 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சட்டசபை பொதுத் தேர்தலில் பாஜக 30 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது.
ஹாட்ரிக்
2009 ஆம் ஆண்டு மூன்றாவது சட்டசபை பொதுத் தேர்தலின்போது பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போதும் அந்த கட்சி தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இரண்டாவது பெரிய கட்சியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உருவானது. எனவே தேர்தலுக்கு பிறகு அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றது.
முதல் முறை
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது, பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அதிகப்படியாக 37 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, இப்போது 2019ல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க முடியவில்லை. அந்த கட்சி மொத்தம் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
காரணங்கள்
முதல்வர் ரகுவர்தாஸ் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை ஒரு பக்கம் பாஜகவை இவ்வாறு முடக்கி விட்டது என்ற போதிலும், அதன் கூட்டணிக் கட்சியாக இருந்த ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சியுடன் உரசல் ஏற்பட்டு தனியாக பிரிந்து தேர்தலை சந்தித்ததும், ஒரு முக்கியமான காரணம். ஏனெனில் இந்த தேர்தலில் பாஜக 33% வாக்குகளையும் ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சி 8 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. எனவே இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்ற சீட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். சொல்ல முடியாது.. ஒருவேளை ஆட்சியை தக்க வைத்துக் கொண்டும் இருக்க முடிந்திருக்கும்.
பாஜக பெருமிதம்
மற்றொரு பக்கம், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு, குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற பாஜக பெருமைப்பட்டு சாதனையாக பிரச்சாரம் செய்த, முக்கியமான சம்பவங்களுக்கு பிறகு நடைபெற்றுள்ள இந்த தேர்தலில், மக்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எதிர் கட்சிகளுக்கு வாக்களித்து உள்ளனர் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
மக்கள் பிரச்சினைகள்
மாநில தேர்தல்களில், அந்தந்த மாநிலங்களில் கட்சி செயல்பாடு மற்றும் ஆட்சியின் செயல்பாடு போன்றவைதான் மக்கள் வாக்களிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளும் அளவுகோல் என்பதும், தேசிய பிரச்சினைகள்.. அதிலும் குறிப்பாக, மதம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வாக்காளர்கள் பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதும் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ள மெசேஜாக பார்க்கப்படுகிறது.