பாஜக எதிர்காலத்தில் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும்.. ஜேபி நட்டா பதவியேற்பில் பிரதமர் மோடி!
டெல்லி: பாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா பொறுப்பேற்ற நிலையில், அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜேபி நட்டா தலைமையில் புதிய உயரத்தை பாஜக தொடும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக தேசிய செயல் தலைவராக இருந்த ஜேபி நட்டா இன்று பாஜகவின் தேசிய தலைவராக முறைப்படி கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திறம்பட செய்வார்
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை வாழ்த்தி பிரதமர் மோடி பேசுகையில், நட்டா எனது பழைய நண்பர், ஒரு கட்சி தொண்டர் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளுடன் முன்னேறிச் சென்று தனது பொறுப்புகளை தனது திறமைகளுக்கு ஏற்றவாறு சுமக்கிறார். .இந்த கடமையை ஜேபி நட்டா திறம்பட செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.
இதுவே நம் இலக்கு
ஜே.பி.நட்டாவின் தலைமையில், கட்சி அதன் முக்கிய மதிப்புகளுடன் முன்னேறும் என்று நான் நம்புகிறேன். பாஜக எதிர்காலத்தில் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும், நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும். தேசத்தின் தேவைகள் மற்றும் விருப்பங்களின்படி, தொண்டர்களை வடிவமைப்பதும், இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதும் எங்கள் இலக்கு.
உத்வேகம் கொடுக்கும்
நடா ஜியின் தலைமை எங்களுக்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுக்கும். அவர் வெற்றி பெறுகிறார் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அவர் எதைக் கேட்டாலும், நாம் அதை வழங்க வேண்டும். ஒரு கட்சியின் கடைக்கோடி தொண்டன் என்ற வகையில், நமது தாய்நாட்டின் மீதான அன்போடு நாம் முன்னோக்கி செல்லும் பயணத்தில் நமது முக்கிய மதிப்புகளுடன் நடக்க வேண்டும்." இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பாஜக பலமானது
கட்சியின் முன்னாள் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை பாராட்டி பிரதமர் மோடி பேசுகையில், " பாஜகவின் செயல்பாடுகள் ஜனநாயக ரீதியாக இருப்பது சிறப்பு. நாங்கள் இங்கு சிறிது நேரம் இல்லை, நீண்ட காலமாக தாய் இந்தியாவுக்கு சேவை செய்ய இங்கு வந்துள்ளோம். கட்சியின் தேசியத் தலைவராக இருந்த அமித் ஷாவின் பதவிக்காலத்தில் பாஜக தனது வரம்பை விரிவுபடுத்தியுள்ளது ". இவ்வாறு கூறினார்.
இதுவே பாஜக சிறப்பு
மோடிக்குப் பிறகு பேசிய நட்டா, "என் மீது நம்பிக்கை வைத்ததற்காக" பிரதமருக்கு நன்றி என்று தெரிவித்தார். "என்னைப் போன்ற ஒரு கடைநிலை தொண்டன், ஒரு கிராமத்திலிருந்து வந்து தேசிய தலைவராக வருவது பாஜகவின் சிறப்பு" என்று நட்டா கூறினார்.