தமிழக சிஆர்பிஎஃப் வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல்கள் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
Recommended Video
அரியலூர்: தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர்கள் சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் உடல்கள் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகியோரின் உடல்கள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தன.
அவர்களது உடல்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்எல்ஏ அன்பில் மகேஷ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், திருச்சி, அரியலூர் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து ராணுவ வீரர் சிவசந்திரனின் உடல் ராணுவ வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு பொதுமக்களின் பார்வைக்காக உடல் வைக்கப்பட்டது. கார்குடிக்கு சென்ற பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்,சிவசந்திரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தினர், காவல்துறை உயரதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, மாவட்டநிர்வாகத்தினர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து சிவச்சந்திரனின் உடல் ஊர்வலமாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி மனைவி காந்திமதியிடம் வழங்கப்பட்டது. இதே போன்று, அதே தனி விமானம் மூலம் மற்றொரு வீரரான சுப்பிரமணியத்தின் உடல் திருச்சியில் இருந்து மதுரை விமான நிலையம் கொண்டு எடுத்துச் செல்லப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதுரை ஆட்சியர் நடராஜன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ வாகனம் மூலம் அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சொந்த ஊரான சவலப்பேரியில் சுப்பிரமணியனின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட உயரதிகாரிகள், காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
சுப்பிரமணியனின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சுப்பிரமணியத்தின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சொந்த வயலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுப்பிரமணியத்தின் மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி அவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கப்பட்டது.
அரசு அறிவித்த ரூ. 20 லட்சம் காசோலையும், அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும் வீரர்கள் சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.