குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆளில்லா மர்ம படகு.. கைப்பற்றி தீவிர விசாரணை
கட்ச் : ஹராமி நலா பகுதியில் இன்று இரவு ஆளில்லா மர்ம படகு ஒன்று நின்றிருந்ததைக் கண்ட எல்லைப் பாதுகாப்பு படையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி இரவு குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தென்மேற்கில் சுமார் 365 கி.மீ. தொலைவில் சிறிய ரக மர்ம கப்பல் இந்திய எல்லை நோக்கி வேகமாக முன்னேறி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் அந்தப் பகுதியில் அரண் அமைத்து இடைமறித்ததையடுத்து, அந்த கப்பல் வெடித்துச் சிதறியது.
அந்த கப்பலை இந்திய கப்பற்படை வெடி வைத்து தகர்த்ததாகவும் புகார் எழுந்தது.
இதனிடையே கடந்த மாதம் கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சர்வதேச கடல் எல்லை யில் மர்ம படகு ஒன்று இந்திய எல்லை நோக்கி முன்னேறுவதாக உளவுத் துறை தகவல் தெரிவித் தது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கடலோர காவல் படை யின் ரோந்து விமானம் படகை கண்டுபிடித்தது.
ரோந்து கப்பல்களில் விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் மர்ம படகை சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் பாகிஸ்தான், ஈரான் நாடுகளைச் சேர்ந்த 12 பேர் இருந்தனர். அதிநவீன செயற்கைக்கோள் தொலைபேசி களை வைத்திருந்த அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்ட 12 பேரும் விழிஞ்சம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கட்ச கடற்கரை ஹராமி நலா பகுதியில் மர்ம படகு ஒன்று ஒதுங்கியது. அதனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையிட்டதில் அந்த படகு பாகிஸ்தானை சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த படகில் ஆயுதங்களோ, வெடிப்பொருட்களோ இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். எனினும்பிடிபட்ட மர்ம படகு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.